கண்களின் பின்புறம் உள்ள விழித்திரையில் ரெடினோபிளாஸ்டோமா எனும் விழித்திரை புற்றுநோய் ஏற்படும். ஒரு கண்ணிலோ இரண்டு கண்களிலோ ஏற்படும். இது மிக அரிதான நோய். குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அதிகளவில் தாக்கும் நோய். ஆரம்ப நிலையில் இந்த நோய் இருந்தால், குணப்படுத்தலாம். ஆனால் பிற புற்றுநோய்களைப் போல நாளடைவில் உடலெங்கும் பரவும் அபாயம் உண்டு.

காரணங்கள்:

விழித்திரை புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. கருவில் குழந்தை வளரும்போது ஏதேனும் குறைபாடு ஏற்பட்டிருந்தால் விழித்திரையில் புற்றுநோய் ஏற்படும். பெரும்பாலான குழந்தைகளுக்கு விழித்திரை செல்கள் வேகமாக வளர்ந்து திடீரென வளர்ச்சி நின்றுவிடும். சில குழந்தைகளுக்கு செல்களின் வளர்ச்சி நிற்காது. இந்த இயல்பற்ற வளர்ச்சியால் புற்றுநோய் ஏற்படும். சில குழந்தைகளுக்கு மரபணு மாற்றங்கள் அல்லது பரம்பரை சிக்கல்கள் காரணமாகவும் விழித்திரையில் புற்றுநோய் ஏற்படலாம்.

 அறிகுறிகள்:
  • கண் பாவையின் நடுவில் வெள்ளையாக வட்டம் தோன்றுதல்
  • மாறுகண்
  • கண்ணின் வெள்ளைப் பகுதி நிறம் மாறுதல்
  • கண்கள் சிவப்படைதல்
  • வீக்கம்
  • பார்வையில் குறைபாடு (குழந்தைகளின் பார்வையில் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிவது கடினம்)

கட்டியின் அளவு, பார்வை குறைபாடு, நோயின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

சிறிய கட்டிகள்:
  • கட்டியில் உள்ள சிகிச்சைகளில் லேசர் கதிர்களை செலுத்துதல்
  • கட்டியை உடைத்தல்
 பெரிய கட்டிகள்:
  • ரேடியோதெரபி: சக்திவாய்ந்த கதிர்வீச்சுகளால் புற்றுநோய் கட்டிகளை அழித்தல்
  • கீமோதெரபி: உடலில் மருந்து செலுத்தி புற்றுநோய் கட்டிகள் மேலும் வளராமல் தடுத்தல்
  • அறுவை சிகிச்சை: பாதிக்கப்பட்ட கண் மற்றும் புற்றுநோய் கட்டியை அகற்றுதல்.

ஒவ்வொரு வகை சிகிச்சைக்கும் ஒவ்வொரு பக்க விளைவுகள் ஏற்படும். புற்றுநோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கண் அகற்றப்படாது. கண்ணைப் பாதுகாக்க முடியவில்லை எனும் நிலை வரும்போதுதான் கண் அகற்றப்படும் அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் புற்றுநோய் தாக்கும் நிலை ஏற்படும்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட கண் அகற்றப்படும்.

முடிவுகள்:

பெரும்பாலும் ஆரம்ப நிலையிலேயே விழித்திரை புற்றுநோய் கண்டறியப்படும். இவ்வாறு கண்டறிந்தால் சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கண் பாவையைத் தாண்டி புற்றுநோய் வளர்வதற்குள் குணப்படுத்த முடியும். கண்ணைத் தாண்டி புற்றுநோய் பரவிவிட்டால் சிகிச்சை அளிப்பது கடினம். எனவே, குழந்தையின் பார்வை வித்தியாசம் தெரிந்தாலோ கண் பாவையின் நிறம் மாறி இருந்தாலோ கண் மருத்துவரை காலந் தாழ்த்தாமல் சந்தித்து கண்களைப் பரிசோதனை செய்யவும்.

  1. புற்றுநோய் ஏற்பட்டால் கண்களை அவசியம் அகற்ற வேண்டுமா?

    கண்ணைப் பாதுகாக்க முடியவில்லை எனும் நிலை வரும்போதுதான் கண் அகற்றப்படும் அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் புற்றுநோய் தாக்கும் நிலை ஏற்படும்போது புற்றுநோய் பாதிக்கப்பட்ட கண் அகற்றப்படும்.

  2.  கண்ணை அகற்றியபிறகு பார்வை திரும்பப் பெற ஏதேனும் வழி உள்ளதா?

துரதிர்ஷ்டவசமாக, இல்லை. எனினும், கண்ணை அகற்றியபிறகு செயற்கைக் கண் பொருத்தப்படும். பார்ப்பதற்கு இயல்பான கண்ணைப் போன்றே தோன்றும். 

  1. சிகிச்சைக்கு பிறகு புற்றுநோய் கட்டி மீண்டும் ஏற்படுமா?

அதிக வாய்ப்புள்ளது. கண்களின் நிலையை அறிந்துகொள்ள, நோயாளிகள் சீரான இடைவெளியில் கண்களைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 

  1. குடும்பத்தில் மற்றவர்களுக்கும் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதா?

ஆம். குழந்தைகளுக்கு விழித்திரை புற்றுநோய் ஏற்படுவது மரபணு மாற்றங்களாலும் இருக்கலாம். எனவே, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் மற்றும்  உடன்பிறந்த சகோதர, சகோதரிகளுக்கும் கண்களை பரிசோதனை செய்துகொள்வது மிக மிக அவசியம். 

  1. ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள் எவ்வாறு இருக்கும்?

ரேடியோதெரபி சிகிச்சையில் சக்திவாய்ந்த கதிர்வீச்சுகளால் புற்றுநோய் கட்டிகள் அழிக்கப்படும். கீமோதெரபி சிகிச்சையில் உடலில் மருந்து செலுத்தி புற்றுநோய்

கட்டிகள் மேலும் வளராமல் தடுக்கப்படும். இரு சிகிச்சைகளுக்கும் 2-3 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களில் மறுபரிசோதனைகளுக்கு தவறாமல் வர வேண்டும். ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சைகள், பல முறை செய்ய வேண்டிய தேவை இருக்கும்.

ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சைகளின்போது வாந்தி, எடை குறைதல், அதிக அளவில் முடி கொட்டுதல், மன அழுத்தம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். அதுபோன்ற வேளைகளில் குடும்பத்தினரின் ஆதரவும் அன்புமே நோயாளிகளுக்கு மிகவும் தேவை. ஆரோக்கியமான சமச்சீரான உணவு, நோயாளிகளுக்கு அவசியம் தேவை.